1,000 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் இருவர் கைது

1,000 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் இருவர் கைது

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி இப்பந்தீவு களப்பு பகுதி மற்றும் கடற்பிரதேசத்தில் இருந்து 1,000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் அதிவேக ரோந்து கப்பல் கடற்படையினர் குறித்த பகுதிகளில் ​நேற்று (25) விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது இப்பந்தீவு களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த படகில் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அந்த படகில் இருந்த இருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.

5 மூடைகளில் அடைக்கப்பட்ட 160 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் இதன்போது கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் கடற்படையினர் நேற்று (25) மற்றுமொரு சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, இப்பந்தீவு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு டிங்கி இயந்திர படகுகளை கடற்படையினர் சோதனை செய்த போது அந்த இரு படகுகளிலும் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது 25 மூடைகளில் 840 கிலோ கிராம் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மஞ்சள் உள்ளூர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் நோக்கில் இவை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு இப்பந்தீவு களப்பு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறினர்.

அத்துடன் இப்பந்தீவு கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகளையும், இரண்டு டிங்கி படகுகளையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி , புத்தளம் ஆகிய பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேற்று (25) வரையிலான காலப்பகுதியில் 9,770 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 இந்தியர்கள் உட்பட 19 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.