வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு- பெங்களூருவில் பெட்ரோல் ரூ.111.34-க்கு விற்பனை

வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு- பெங்களூருவில் பெட்ரோல் ரூ.111.34-க்கு விற்பனை

பொது முடக்கங்கள் விலக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுக நிலைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்தியா தனது பெட்ரோல்-டீசல் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது.

 


ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. எனவே சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் இந்தியாவில் எதிரொலித்து வருகிறது.
 

அதன்படி, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

 

கொரோனா வைரஸ்


கொரோனாவில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருவதால் கச்சா எண்ணெய்க்கான தேவை தற்போது ஏறுமுகமாக உள்ளது. பொது முடக்கங்கள் விலக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுக நிலைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஆனால் கொரோனாவையொட்டி உற்பத்தியை குறைத்துக்கொண்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள், தற்போது தேவை அதிகரித்த போதும், எண்ணெய் உற்பத்தியை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை.

உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தபோதும், கணிசமான அளவுக்கு உற்பத்தியை அந்த நாடுகள் அதிகரிக்கவில்லை. இதைப்போல அமெரிக்காவும் தனது எண்ணெய் வினியோகத்தை குறைத்துக்கொண்டு உள்ளது.

இந்த காரணிகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலர் என்ற நிலையை கடந்த வாரம் எட்டியது. இது கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின் மிகவும் அதிகம் ஆகும்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்து உள்ளன. இது பெட்ரோல்-டீசல் விலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்று வருகிறது.

இதன் காரணமாக பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. பெட்ரோல்-டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலை மாறுபடுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம் அவற்றின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது.

அந்தவகையில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக இருந்தது. மும்பையில் ரூ.113.46 ஆகவும், பெங்களூருவில் ரூ.111.34 ஆகவும், சென்னையில் ரூ.104.68 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது.

இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.74 ஆகவும் உச்சத்தில் இருந்தது.

இந்தியாவில் கடந்த மாதம் 28-ந் தேதிக்கு பின் 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.6.40 அதிகரித்து இருக்கிறது. டீசல் விலையும் செப்டம்பர் 24-ந் தேதிக்கு பின் 24 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ரூ.7.70 ஏற்றம் கண்டிருக்கிறது.

முன்னதாக கடந்த மே 4 முதல் ஜூலை 17-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.44 வரையும், டீசல் விலை ரூ.9.14 வரையும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இது, அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் எழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.