சொந்த மண்ணில் ஏமாற்றம்: மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மண்டியிட்டது இங்கிலாந்து!

சொந்த மண்ணில் ஏமாற்றம்: மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மண்டியிட்டது இங்கிலாந்து!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல், மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும், செனோன் கெப்ரியல் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 318ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிரைஜ் பிரத்வெயிட் 65 ஓட்டங்களையும், டவ்ரிச் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் எண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டொம் பெஸ் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 114 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ஸெக் கிரவ்லி 76 ஓட்டங்களையும், டொமினிக் சிப்ளி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செனோன் கெப்ரியல் 5 விக்கெட்டுகளையும், ரொஸ்டன் சேஸ் மற்றும் அச்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், ஜெரமைன் பிளக்வுட் 95 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்சர் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக, 9 விக்கெட்டுகளை சாய்த்த செனோன் கெப்ரியல் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி மன்செஸ்டர் ஓல்ட் டரப்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.