கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 கற்பழிப்பு வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 கற்பழிப்பு வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 



பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

 


அதன்படி கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது முந்தைய ஆண்டை (4,05,236) விட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் கற்பழிப்பு சம்பவங்கள் மட்டுமே 27,046 ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 77 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது.
 

மாநிலங்களை பொறுத்தவரை ராஜஸ்தானில் அதிகபட்சமாக 5,310 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி உள்ளன. அடுத்ததாக உத்தரபிரதேசம் (2,769), மத்திய பிரதேசம் (2,339), மராட்டியம் (2,061), அசாம் (1,657) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கற்பழிப்பு சம்பவங்களை தவிர கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வகையில் 1,11,549 வழக்குகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.