ஆடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வானில் இருந்து விழுந்து மண்ணில் புதைந்து நின்றுக் கொண்டிருந்த மர்மப்பொருள்

ஆடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வானில் இருந்து விழுந்து மண்ணில் புதைந்து நின்றுக் கொண்டிருந்த மர்மப்பொருள்

செங்கல்பட்டு மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55).

இவர் நேற்று முன்தினம்  தன்னுடைய ஆடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார்.

வழியில் ஒரு மர்மப்பொருள் வயலின் நடுவே செங்குத்தாக விழுந்து மண்ணில் புதைந்து நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

மேலும், அது வெடிக்கின்ற சக்தி வாய்ந்த பொருளாக இருக்கலாம் என கருதிய அவர் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

கிராம நிர்வாக அலுவலரும் உடனடியாக கிளம்பி வந்து அந்த மர்ம பொருளை பார்வையிட்டார். அது பார்ப்பதற்கு வெடிபொருள் போன்று மூன்று அடி நீளத்திலும், பத்து கிலோ எடையுடனும் இருந்தது. அதில் 'எச்சரிக்கை' என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.  

மேலும், அந்த மர்மப் பொருளில் நிறைய எலக்ட்ரானிக் பொத்தான்கள் இருந்தது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. இந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவி கிராம மக்களும் வந்து குவிந்தனர்.

செய்தி கேள்விப்பட்டு செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசீஷ்பச்சாரா மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து மர்மப் பொருளை ஆய்வு செய்தபின் அதை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

இது குறித்து அரக்கோணத்தில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று (27-07-2021) திருக்கழுக்குன்றம் வந்த அரக்கோணம் கடற்படையை சேர்ந்த அதிகாரிகள், அது வெடிக்கின்ற பொருள் இல்லை என்று உறுதி செய்தனர்.

மேலும், அந்த பொருள் கடற்படை விமானத்தில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா? என்ற ரீதியில் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.