மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 800 பாலங்கள் மற்றும் 290 சாலைகள் சேதமடைந்தன.

மகாராஷ்டிரா மாநிலயத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிர மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல நகர்ப்புறங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன.

மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஆங்காங்கே நடந்த நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்தனர். இந்த வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், வெள்ளப் பாதிப்பு குறித்து முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

உத்தவ் தாக்கரே

வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர். வெள்ள பாதிப்புக்குரிய இடத்தில் இருந்து 2 லட்சத்து 29 ஆயிரத்து 74 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம் காரணமாக 290 சாலைகளை சீர் செய்ய வேண்டியது உள்ளது. 800 பாலங்கள் சேதம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட 746 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பணி நடந்து வருகிறது.

மேலும், நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மிக விரைவாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல் மந்திரி அறிவுறுத்தி உள்ளார் என தெரிவித்துள்ளது.