யாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்
யாழ்ப்பாணம் மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தை கடித்ததில் 5 ஆடுகள் காயமடைந்ததுடன் 9 ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 14 ஆடுகளை கடித்துள்ளது. இதில் 5ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 9ஆடுகள் இறந்துள்ளன.
வாழ்வாதாரத்துக்காக தாம் வளர்த்து வந்த ஆடுகளே இறந்தும் காயமடைந்தும் உள்ளதாக அவற்றை வளர்த்து வந்த குடும்பத்தலைவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதனால் தமது வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளதாகவும் எனவே தமது வாழ்வாதாரத்துக்கு அரசாங்கமும் ஏனைய நிறுவனங்களும் உதவ முன்வரவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.