நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் யோகி பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

பிசியான காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இதுகுறித்து கோபி கிருஷ்ணா கூறியதாவது: “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால் அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார். 

 

யோகி பாபு

 

இந்த படத்துக்கு தனது பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று சொன்ன அவரே கொடுத்த ஐடியா தான் இந்த விளம்பர பாடல். ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார். சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்துகொடுத்தார். 

 

பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பேருதவியை செய்த அவரை என்றும் மறக்க மாட்டோம். அவர் மட்டுமல்லாது சக்தி சரவணன், லொள்ளுசபா ஜீவா, பிக்பாஸ் பரணி, டைகர் தங்கதுரை, பிடிச்சுருக்கு அசோக் என அனைவருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்து உதவினார்கள். 

 

இவர்கள் இடம் பெற்றுள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் வியாபாரத்துக்கும் உதவியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார். கலகலப்பான குடும்ப படமாக உருவாகி இருக்கும் நாயே பேயே படம் வரும் 23 ம் தேதி வெளியாக இருக்கிறது.