பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2021 - 2022 தனுசு ராசி நேயர்களே!

பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2021 - 2022 தனுசு ராசி நேயர்களே!

நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும்
(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை) (பெயாரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

வளர்ச்சி தரும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவதோடு, யோகமான நாளும், நட்சத்திரமும், திதியும் கூடும் தினத்தில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வராஹி அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வளர்ச்சியில் உள்ள தளர்ச்சி அகலும்.

தனுசு ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் குருபகவான், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் பாதச்சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறலாம். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். தன ஸ்தானத்தில் சனி பலம் பெற்றிருப்பதால் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான், வெற்றிகள் ஸ்தானத்தில் இருக்கின்றார். தனாதிபதி சனி, சொந்த வீட்டில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகத்தோடும், புத -ஆதித்ய யோகத்தோடும், புத -சுக்ர யோகத்தோடும் இந்த ஆண்டு பிறக்கின்றது. எனவே நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் காண்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் வந்த பிரச்சினை அகலும்.

ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடப்பதால், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றை குறிக்குமிடமான 2-ம் இடத்தில், சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் வாக்கு வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். சிக்கல்களில் இருந்து படிப்படியாக விடுபடுவீர்கள். செல்வ நிலை உயரும் விதத்தில், தொழில் வளம் சிறப்பாக அமையும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ ஏதேனும் முயற்சி செய்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும்.

மூன்றாடமிடத்தில் குருபகவான் இருப்பதால் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தற்கால பணியாக நியமிக்கப்பட்டிருந்தால், அது நிரந்தரப் பணியாக மாறும். விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். சுக ஸ்தானத்திற்கு குரு அதிபதி என்பதால், உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பிள்ளைகள் பட்டப்படிப்பு சம்பந்தமாகவும், படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும், முயற்சி எடுத்திருந்தால் அதிலும் அனுகூலங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகளும் கிடைக்கலாம்.

பஞ்சம ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. அவை யோகம் தரும் விதத்திலேயே அமைகின்றது. புத -சுக்ர யோகம் இருப்பதால், இடம், வீடு வாங்கும் அமைப்பு உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தேங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். ராகு-கேது ஆதிக்கத்தின் விளைவாக புதிய வாகன யோகம் உண்டு. பயணங்களால் பலன் உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

குருவின் வக்ர இயக்கம்

ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், நான்காமிடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குருபகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பண நெருக்கடி ஏற்படலாம். உடன்பிறப்புகளால் மன அமைதி குறையும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஒரு தொகையை கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகும்.

குருப்பெயா்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு13.4.2022 அன்று மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது.

குரு பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். ‘பிள்ளைகளுக்கு வரன்கள் வந்து விலகிப்போகிறதே, எப்பொழுது தான் முடியும்’ என்று அங்கலாய்த்த பெற்றோர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணிபுரிய எதிர்பார்த்த வாய்ப்புகள் கைகூடிவரும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பொன், பொருட்களின் சேர்க்கை உண்டு. பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது. ‘வைத்திருக்கும் வாகனம் தொல்லை தருகிறதே, எப்பொழுது அதை மாற்றலாம்’ என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு, இப்பொழுது அதற்கான வாய்ப்பு உருவாகும். நீண்ட கால நோய்கள் குணமாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகல, சட்டத்துறை வல்லுநர்கள் உங்களுக்கு சரியான பாதையை அமைத்துக் கொடுப்பர்.

மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களை குருபகவான் பார்ப்பதால், விலகிய சொந்தங்கள் விரும்பி வந்து இணையும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனையும் கைகொடுக்கும். பொதுவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது.

ராகு-கேது பெயா்ச்சி காலம்

21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5-ம் இடத்திற்கு ராகுவும், 11-ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இக்காலத்தில் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். முன்னோர் செய்த ஆலயத் திருப்பணிகளைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினையில் இதுவரை தடை செய்த உறவினர்கள் இப்பொழுது விலகுவர். நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை படிப்படியாக அகலும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2,3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. யோகம் தரும் சனிபகவான் வக்ரம் பெறுவதால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் வரும். கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் முடிவடையாமல் போகலாம். சோம்பலும், சோர்வும் மனக்குழப்பமும் அதிகரிக்கும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்- சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. தன்னம்பிக்கை குறையும். பிள்ளைகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை கூடும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பத் தகாத விதத்தில் அமையும். வெளிநாடு சென்றவர்கள், அங்கு சென்றதற்கான பலன் கிடைக்காமல் பாதியிலேயே சொந்த ஊர் திரும்பும் சூழ்நிலை உண்டு. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கிய தொல்லை வரலாம். மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பொருளாதார விருத்தியை அதிகரிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது. ஜென்மச் சனி விலகி விட்டதால், இனிமேல் ஆரோக்கியம் சீராகும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான சூழல் அமையும். பணிபுரியும் பெண்களுக்கு நினைத்த இலக்கை அடைய சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்து சேரும். குரு வழிபாடு குதூகலம் தரும்.