கொரோனா பரவலை தடுக்க சிறந்த வழி எது? - உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதுதான் சிறந்த வழி ஆகும்

உலக சுகாதார நிறுவனத்தின் தெற்கு, கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

 


அப்போது அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதுதான் சிறந்த வழி ஆகும். பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு தடம் அறியவும், பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் முயற்சிகளை மேம்படுத்த வேண்டும்” என கூறினார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு பொதுமக்கள் இருமும்போது அதன்துளிகள் மற்றவர்கள் மீது படாத வகையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கைச்சுத்தம் பராமரித்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் கொரோனா பரவலை மெதுவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.