சுதந்திர சதுக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நபர்-கொலையா? தற்கொலையா? வெளியான புதிய தகவல்
கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நபர், தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, இலங்கை துப்பாக்கி சுடும் போட்டிக்கு பயன்படுத்தும் துப்பாக்கியல்ல என இலங்கை துப்பாக்கி சுடும் போட்டியாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் தற்கொலை செய்துக்கொள்ள பயன்படுத்தி துப்பாக்கி, துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி என பொலிஸ் ஊடகப் பேச்சாளரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
22 பொயின்ட் அரைவாசி தானியங்கி மைக்ரோ கைதுப்பாகியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியை பயன்படுத்தி எந்த போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படுவதில்லை என சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அத்துடன் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு பயன்படுத்தப்படும் 22 பொயின்ட் ரக ரைபில் மற்றும் கைதுப்பாக்கிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதற்காக வருடாந்தம் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் துப்பாக்கி சுடுதல் போட்டியாளர்கள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், 22 பொயின்ட் துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் பெறுவது அவசியமில்லை என ஊடகங்களில் வெளியான தகவலிலும் உண்மையில்லை எனவும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராக்கள் அன்றைய தினம் இயங்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.