ஸ்ரீலங்காவில் புதிய பொறிமுறையை மக்கள் மயப்படுத்தவுள்ள கோட்டாபய!

ஸ்ரீலங்காவில் புதிய பொறிமுறையை மக்கள் மயப்படுத்தவுள்ள கோட்டாபய!

ஸ்ரீலங்காவில் காணி பதிவுகளின் போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கு இலத்திரனியல் முறைமையை (ஈ – காணி) துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் காணிகளை இலத்திரனியல் முறைமையில் பதிவு செய்யும் நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் காணிகளை இலத்திரனியல் முறைமையில் பதிவு செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

காணிப் பதிவுசார் நிறுவனங்கள், வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து அதற்கான குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.

காணிகளை இலத்திரனியல் முறைமையில் பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணினி மயப்படுத்தப்படும்.

பொழிப்பு அறிக்கை பெற்றுக்கொள்ளும்போது கணனிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு online மூலம் காணி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் (ICTA) ஒன்றிணைந்து ஆகஸ்ட் மாதமளவில் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை)யின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல் கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பதிவாளர் நாயகம் என்.சி.வித்தான, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சி.எம்.ஹேரத், காணி உரித்துகள் நிர்ணய ஆணையாளர் நாயகம் ஜி.எம்.எச்.பிரியதர்ஷனி, நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சி.பெரேரா, ஸ்ரீலங்கா தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் ஜயந்த த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.