நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது - உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் பரவல் கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீத உயர்வு ஆகும். 6 வார காலம் சரிவை சந்தித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது ஏற்றத்தை சந்தித்துள்ளது.

கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள் (14 சதவீதம்), தென் கிழக்கு ஆசியா (9 சதவீதம்), ஐரோப்பா (9 சதவீதம்), வட தென் அமெரிக்க நாடுகள் (6 சதவீதம்) ஆகியவற்றில் பரவல் அதிகரித்து இருப்பதே உலகளாவிய கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாகி உள்ளது.

பொது சுகாதார, சமூக கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் வாராந்திர கொரோனா பலி எண்ணிக்கை குறைகிறது. கடந்த வாரம் 63 ஆயிரம் புதிய இறப்புகள் பதிவாகி இருக்கின்றன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது