‘தாயுமான’ தந்தைகளின் தவிப்புகள்

விவாகரத்துப் பெற்றுப் பிரிந்த அல்லது துணையை இழந்த கணவன் அல்லது மனைவி, தமது குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமல்ல. அதிலும் தனியாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளின் தவிப்புகளை தனிப் பட்டியலே போடலாம்.

விவாகரத்துப் பெற்றுப் பிரிந்த அல்லது துணையை இழந்த கணவன் அல்லது மனைவி, தமது குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமல்ல. அதிலும் தனியாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளின் தவிப்புகளை தனிப் பட்டியலே போடலாம்.

அதிகம் விவாதிக்கப்படாத ஒற்றைப் பெற்றோரின் கஷ்டங்கள் ஒரு மவுன சோகமாகவே நீடித்து வருகின்றன.

 


தனியாக பெண் குழந்தையை வளர்ப்பதற்குத் தடுமாறும் தந்தையர், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் சங்கடங்கள் அதிகம் என்கின்றனர். குறிப்பாக, ஒரு பெண் குழந்தை, சிறுமி என்ற நிலையில் இருந்து பெண் என்ற நிலைக்கு மாறும் பருவம். அந்தப் பருவத்து விஷயங்களை அவர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் போதுமான நேரத்தைக் கழிப்பதற்கும் தாங்கள் தடுமாறுவதாக ஒற்றைப் பெற்றோராக உள்ள தந்தையர் கூறுகின்றனர். இதற்கு உதாரணம், மனைவியைப் பிரிந்து 14 ஆண்டுகாலமாக தனது மகள், மகனை தனியாக வளர்ந்துவரும் ஷியாம்குமார். கட்டிடக் கலை நிபுணரான இவர், ‘‘எனது மகள் ஒன்பதாம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். அவர்கள் சிறுகுழந்தைகளாக இருந்தபோதே நானும் என் மனைவியும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு குழந்தைகளை நான் மட்டும்தான் வளர்த்து வருகிறேன். எனது பெற்றோர் கொஞ்சம் உதவி செய்கின்றனர்’’ என்கிறார்.

ஷியாம்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால், அவரால் தனது குழந்தைகளுக்கு ஏற்ப பணி நேரத்தை மாற்றிக்கொள்ள முடிகிறது. ‘‘நான் எப்போதுமே வீட்டுக்கு சீக்கிரமாகத் திரும்பி குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்’’ என்கிறார். ஆனாலும் அவருக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.

அவர் மகள் ‘பெரியவளாகி’ விட்டாள். ‘‘ஆரம்பத்தில், மாதவிலக்கு போன்ற விஷயங்களை அவளிடம் பேசுவது கடினமாக இருந்தது. அந்த விஷயத்தில் எங்கம்மாவும், எனது சக பெண் ஊழியர்களும்தான் உதவினர். தற்போது நானும் இதுகுறித்து அவளிடம் படிப்படியாகப் பேச ஆரம்பித்துவிட்டேன்.’’

தற்போது இவர்களின் தந்தை - மகள் உறவு, உலகில் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசும் அளவுக்கு அழகாக மலர்ந்திருக்கிறது.

‘‘மகள் எந்த விஷயம் பற்றியும் என்னிடம் பேசுவதற்கும் தயங்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். தற்போது மாதந்தோறும் நான்தான் அவளுக்கு சானிடரி நாப்கின் வாங்கிக் கொடுக்கிறேன். முதலில், நான் அதை வித்தியாசமாக நினைக்கக்கூடாது அல்லவா?’’ என்கிறார் ஷியாம்.

மகளுக்காக சின்னச் சின்ன அழகுசாதனப் பொருட்களைக்கூட தேடித் தேடி வாங்குவதில் ஆனந்தப்படுகிறார், ஷியாம். மகளைப் பற்றிப் பேசும்போதே அவர் முகம் பூரிக்கிறது.

‘‘அவளை முதன்முதலில் சலூனுக்கு முடி வெட்ட கூட்டிப்போனது ஞாபகம் இருக்கிறது. அவள் ரொம்பச் சுட்டி. சலூன் இருக்கையில் அவளை அமரவைப்பதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. சரி, இனி நாம் அவளுக்கு வீட்டிலேயே முடிவெட்டி விடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். யூடியூப் பார்த்துத்தான் முடிவெட்டக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, நன்றாகவே முடிவெட்ட ஆரம்பித்துவிட்டேன். மகளுக்கு எட்டு வயதாகும் வரை நான்தான் முடிவெட்டி விட்டேன்’’ என்று பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார், ஷியாம்.

தனியாக குழந்தைகளை வளர்க்கும் மற்றொரு நபர், சங்கர். அவர் கூறுகையில்,

‘‘என்னை அறிந்த பலரும் சொல்வது, நான் குழந்தை வளர்க்கும்விதம் வித்தியாசமாக இருக்கிறது என்பது. நான் என் மகளை குழந்தை போலக் கொஞ்ச மாட்டேன், அதேநேரம் அவளது அறிவைச் சீண்டவும் மாட்டேன்’’ என்கிறார்.

குழந்தை வளர்ப்பில் முக்கியமான விஷயம், நேர்மை என்பது சங்கரின் கருத்து. குழந்தைகளிடம் தான் ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்பதுடன், அவர்களையும் எதையும் மறைக்காமல் சொல்லும்படி ஊக்குவிப்பதாகக் கூறுகிறார்.

‘‘எனது இந்தப் பழக்கம், அப்பாவிடம் எதையும் மனந்திறந்து பேசலாம் என்ற தைரியத்தை என் மகளுக்குத் தந்திருக்கிறது’’ என்கிறார்.

‘‘என் மகள் சாதனாவுக்கு ஒன்பது வயதாகிறது. ரொம்பப் புத்திசாலி. விண்வெளி விஷயங்கள் தொடங்கி, சுற்றுச்சூழல் மாசுபாடு வரை எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் பேசுவோம். ஏன், சிலநேரங்களில் சில தத்துவங்கள் பற்றிக்கூட நாங்கள் விவாதிப்போம்’’ - சங்கரின் குரலில் ஒரு தந்தையின் பெருமிதம் தெரிகிறது.

இவர் தனது ஒரே மகளுடன் சமீபத்தில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அப்போது, சாதனா தனது அறையைக் காலி செய்தபோது, தனக்குத் தேவையில்லை என்று பல பொருட்களை அவளாகவே ஒதுக்கிவிட்டாளாம்.

‘‘நான் அதுபற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவளாகவே முடிவெடுத்துச் செயல்பட்டாள். அப்போதுதான், நாம் நமது குழந்தைகளுக்குப் பலவற்றைப் போதிக்க முயல்கிறோம், ஆனால் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என உணர்ந்தேன்’’ - மனப்பூர்வமாகச் சொல்கிறார், சங்கர்.

மனோவியல் மருத்துவரான ஸ்ரீதேவி, ‘‘தனியாக பெண் குழந்தையை வளர்க்கும் தந்தையும் அப்பெண் குழந்தையும் மனந்திறந்து பேசத் தயங்கும் இடங்கள் இருக்கின்றன. இயல்பாகவே, பெண் குழந்தைகள் தங்கள் உடம்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தாயிடம்தான் எளிதாகப் பகிர்ந்துகொள்வார்கள். இயல்பாக, சரளமாகப் பேசுவதும், உறவாடுவதும், தந்தை- மகள் உறவு பரஸ்பர புரிதலுடன், வலுவாக வளர உதவும். தனியாக குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தையர், அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு நிபுணரின் ஆலோசனை தேவை என்றால், அதைப் பெறத் தயங்கக் கூடாது. காரணம், தந்தைகளால் பெண் குழந்தைகளின் சில பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்’’ என்று எடுத்துரைக்கிறார்.

முதலில் தந்தை... அப்புறம் தோழன்

தாயின்றிக் குழந்தைகளை வளர்க்கிறோம் என்று ரொம்ப செல்லம் கொடுக்கக் கூடாது, தோழன் போல நடக்கிறேன் என்று ஓவராக போகக்கூடாது என்று சங்கர் கூறுகிறார். ‘‘நாம் முதலில் அவர்களின் பெற்றோர் என்பதை உணர்த்த வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டிய விஷயங்களில் நிச்சயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது, சில நேரங்களில் நாமே வியக்கும்படி அவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்’’ என்கிறார். ஆண், பெண் குழந்தைகள் இடையே பாகுபாடு கூடாது என்பது ஷியாம்குமார் கருத்து. ‘‘நான் என் மகனையும் மகளையும் ஒன்றுபோல நடத்துவதில் கவனமாக இருக்கிறேன். நாங்கள் ஒன்றாக கால்பந்து ஆடுவோம், நீச்சல்குளத்துக்குச் செல்வோம், புதிர் விளையாட்டுகள் விளையாடுவோம்’’ என்கிறார்.