கொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்

கொரோனாவின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது

உலகில் கொரோனா முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சிங்கப்பூர் கல்வி மந்திரி லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், “ கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

 


இதையெல்லாம் தாண்டி, கொரோனா தடுப்பூசி படிப்படியாக சர்வதேச அளவில் மறுதொடக்கம் ஆகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இருக்காது. மாஸ்க் அணிந்து கொள்வது, கூட்டங்களை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டும் தொடரும். அடுத்த ஆண்டும் தொடரலாம். நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.

சிங்கப்பூரின் கொரோனா தடுப்பு செயல் குழுவின்  துணைத்தலைவராக லாரன்ஸ் வாங் பொறுப்பு வகித்து வருகிறார். சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 59,366- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 29- பேர் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.