ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்

ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்

தமிழகத்தின் முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

 


அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கி, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் பொதுப்பணித்துறை மேற்கொண்டது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந்தேதி ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, நாளை மறுநாள் (27-ந்தேதி) பீனிக்ஸ் பறவை வடிவிலான ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் நிலையில் மறுநாள் ஜெயலலிதா நினைவு இல்லம் திறக்கப்படுகிறது.

சென்னை போயஸ் கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ந்தேதி திறக்கப்படுகிறது. வேதா இல்லத்தை ஜன.28ந்தேதி காலை 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு பற்றி விளம்பரம் வாயிலாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா நினைவு இல்லம் திறக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.