சீனா வகுத்த மற்றொரு திட்டம்! சுற்றிவளைக்கப்படும் இந்தியா

சீனா வகுத்த மற்றொரு திட்டம்! சுற்றிவளைக்கப்படும் இந்தியா

சீன அரசாங்கம் இந்தியாவின் எல்லைகளை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் லடாக்கில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அங்கு சற்று அமைதி நிலை ஏற்பட்டிருந்து. எனினும், லடாக்கை தொடர்ந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறிவைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கில் சீனா குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லை பகுதியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரை ஒட்டிய இந்த எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் வீதிகள் அமைக்க சீனா உதவி வருகிறது. அந்த பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

அதை காரணமாக வைத்து, அங்கு விமான நிலையம், ரயில் பாதை, வீதி ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொடுக்கும்போது, சீனாவும் தன்னை இராணுவரீதியாக அப்பகுதியில் பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அவ்வழியாக செல்கிறது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் சீனா ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. தனது நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, சொந்த பிராந்தியத்தையே சீனா உருவாக்கி உள்ளது. அங்கு பாகிஸ்தானியர் கூட அனுமதியின்றி நுழைய முடியாது.

எல்லை பகுதியில் கட்டுமான பணியில் 30 சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அத்துடன், ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 2 ஆயிரத்து 500 சீன நிபுணர்கள், இப்பணியை செய்து வருகின்றனர். சீன அரசின் தேசிய என்ஜினீயரிங் நிறுவனம் உள்பட பெரிய நிறுவனங்கள், எல்லையை ஆக்கிரமித்துள்ளன என்கின்றன இந்திய ஊடகங்கள்.

இதேவேளை, ராஜஸ்தான் எல்லைக்கு 8 கி.மீ. தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அங்கு 50 எண்ணெய் கிணறுகள், சீன நிபுணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்குள்ள பள்ளிகளில் சீனாவின் மண்டாரின் மொழி கற்பிக்கப்படுவதாக இந்திய இராணுவத்தில் கேர்ணலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேஷ் ராய் கூறியுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பொறுப்பை சீன இராணுவமே கவனிக்கிறது. இதனால், எல்லை பாதுகாப்பு படை கவனமாக இருப்பதாக அதன் ஐ.ஜி. அமித் லோதா தெரிவித்தார். இந்திய மத்திய அரசு, தனது முழுக் கவனத்தையும் ராஜஸ்தான் எல்லைப்பக்கம் திருப்ப வேண்டும் என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.