குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்று வருமா? அதன் அறிகுறிகள் என்ன?

பெரும்பாலும் குழந்தைகள் இந்த சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படும் போது அதை சொல்ல தெரிவதில்லை. அம்மாக்கள் கவனித்து கண்டறிந்தால் மட்டுமே இந்த தொற்றை கவனிக்க முடியும்.

வளரும் குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்று வருவது பொதுவானதுதான். இது எளிதான ஆன்டி பயாடிக் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். அரிதாக இது தீவிரமான பிரச்சனையின் காரணமாகவும் இருக்கலாம்.

 

சிறுநீர்ப்பாதை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் சிறுநீர் பாதை சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை இயங்கும் மென்மையான குழாய் அமைப்பு உண்டு. கீழ் பாதையில் சிறுநீர்ப்பை மற்றும் வெளிப்புறம் வரை வரக்கூடிய சிறுநீர்ப்பை குழாய் அடங்கும். இந்த சிறுநீர்த்தொற்று ஏன் உண்டாகிறது என்பது குறித்து அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

குழந்தைகளில் யுடிஐக்கான காரணங்களில் பொதுவாக சொல்லப்படுவது மலச்சிக்கல் சிறுநீர் முழுமையாக கழிக்காமல் தேக்கிவைப்பது தான். ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகள் தான் அதிகமாக சிறுநீர்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் பெண் பிள்ளைகளின் சிறுநீர்க்குழி குறைவாக இருப்பதோடு ஆசனவாயிலிருந்து வெளிவரும் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பாதை மற்றும் யோனிக்குள் நுழைந்து இரண்டு பகுதிகளிலும் தொற்றை உண்டாக்குகிறது.

 

 

வெகுஅரிதாக சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் அதிகமாக இந்த யுடிஐ பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். மேலும் சிறுநீர்ப்பாதை குறுகலாக இருந்தாலும் அது சிறுநீரை தடுப்பதோடு அங்கு கிருமிகளை அதிகரிக்க செய்து நோய்த்தொற்றுகளை வளர செய்யலாம்.

 

நீண்ட நேரம் டயபர் மாற்றாமல் இருப்பது, அவ்வபோது சிறுநீர் கழித்தாலும் சுத்தமாக பராமரிக்காதது, மோசமான உணவுகளும் கூட காரணமாகலாம்.

 

குழந்தைகள் யுடிஐ தொற்றால் பாதிக்கப்படும் போது உண்டாகும் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம். பிள்ளைகள் சிறுநீர் கழிக்கும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். சமயங்களில் சிறுநீரில் இரத்தம் கலந்து வரும். சிறுநீர் கழித்த பிறகு துர்நாற்றம் வீசக்கூடும். சிறுநீர் அடர்த்தியாக கலங்கலாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள்.

 

சிறுநீர் சொட்டு சொட்டாக பிரியலாம். மிகச்சிறிதளவு மட்டுமே வரலாம். சிறுநீர் வந்த பிறகு கழிப்பறைக்கு செல்வதற்குள் வேகமாக வரக்கூடும். சமயங்களில் இரவில் படுக்கையை நனைக்கலாம். சிறுநீர் கழிப்பதற்கு முன்பு அல்லது பின்பு அந்த இடத்தில் எரிச்சல் வந்தாலும் அது சிறுநீர் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். பிள்ளைகள் அடிக்கடி முதுகு பக்கங்களிலும் அடி வயிற்றிலும் வலியை உணர்வார்கள்.

 

பிள்ளைகளுக்கு காய்ச்சல், குமட்டல் உணர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் இருக்க கூடும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போது கவனித்து வந்தால் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்கலாம்.

 

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் டயபர் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி டயபர் மாற்றிவிடுங்கள். முடிந்தால் டயபர் அணியாமல் விடுங்கள். அடிக்கடி உள்ளாடை மாற்றினால் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். காற்றோட்டமான இடமாக இருப்பதால் இங்கு பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படுகிறது.

 

பிள்ளைகளுக்கு அதிகமாக பழச்சாறு தண்ணீரை பழக்குங்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் அவர்களது உறுப்பை சுத்தம் செய்து விடுங்கள். கடினமான காரமான, மசாலா அதிகம் நிறைந்த உணவுகள், துரித உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்த்து மென்மையான உணவுகளை மட்டுமே கொடுத்து பழகுங்கள். சரியான சிகிச்சையோடு, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்தினால் மீண்டும் இந்த சிறுநீர் தொற்று வராமல் தடுக்கலாம்.