உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வௌியாகும் தினம்

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வௌியாகும் தினம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்பிரல் முற்பகுதியிலோ வெளியிடப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம், பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றி, காலதாழ்த்தாமல் மாணவர் அடையக்கூடிய இழப்புக்களை சீர்செய்யப்போவதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு எதுவித காலதாமதமும் ஏற்படாத வகையில் பெறுபேறுகளை விரைவாக வெளியிடப் போவதாகவும், உயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்திலும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் ஏனையை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை திங்கட்கிழழை மீளவும் திறப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ளவற்றைத் தவிர, மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 11 ற்கான வகுப்புக்களை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வது இதன் நோக்கமாகும்.

இவ்வாண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்