கருணாவின் வரலாற்று இரகசியம்! மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

கருணாவின் வரலாற்று இரகசியம்! மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் தெரிந்ததே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியவில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர்,

“கருணா அம்மான் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர் விடுதலை புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள். கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் தெரிந்ததே.

சவால்களை எதிர்க் கொள்ள முடியாதவர் சிறந்த தலைவராக செயற்பட முடியாது. நாம் ஆட்சியதிகாரத்தை பெறும் போதெல்லாம் சவால்கள் அதிகரித்ததாகவே இருந்தது.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். தற்போதும் பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்- 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம்.

கருணா அம்மான் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை தற்போது எதிர் தரப்பினர் தங்களின் அரசியல் பிரசாரங்களுக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் விடுதலை புலிகள் அமைப்பு பலம் பெறுவதற்கு ஆயுதம் வழங்கிய நபர் தொடர்பில் கருத்துரைப்பது இல்லை.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போது விடுதலை புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டது. பலம் வாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன .

அந்த ஆயுதங்களை கொண்டே விடுதலை புலிகள் அமைப்பு இராணுவத்தினரை கொன்றார்கள். கருணா அம்மானின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவரும் அறிந்ததே.

வரலாற்று ரீதியில் பெருமை கொண்ட ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளினால் கட்சி பலவீனமடைந்துள்ளது.

ஆகவே நாடாளுமன்றத்தில் பலம் மிக்க கட்சி நிலையான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும். நாட்டுக்கு சேவையாற்றுபவரை மக்கள் இம்முறை தமது பிரநிதியாக தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும் ” என்றார்.