கேகாலையைச் சேர்ந்த விமானியே திருமலை விமான விபத்தில் உயிரிழப்பு
திருகோணமலை – கந்தளாய் சூரியபுர பகுதியில் விபத்துக்குளளான விமானத்தில் கேகாலையைச் சேர்ந்த பயிற்சி விமானி உயிரிழந்ததாக ஸ்ரீலங்கா விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கேகாலையை சேர்ந்த அமரக்கோன் (வயது 23 ) என்ற பயிற்சிபெற்றுவரும் கெடேட் அதிகாரியான விமானியே விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண தெரிவித்தார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீலங்கா விமானப்படையில் இணைந்திருந்ததுடன் அதே வருடத்திலேயே பயிற்சி விமானியாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்த நிலையில் சீனக்குடா விமானத் தளத்திலிருந்து இன்று பகல் 1.05 மணிஅளவில் பயணத்தை அவர் ஆரம்பித்திருக்கின்றார். பின்னர் பிற்பகல் 1.15 அளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பினை PT-6 ரக விமானம் இழந்த நிலையில் விபத்துக்கு உள்ளானது.
அதனையடுத்து மீட்கப்பட்ட அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.