மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 120 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 120 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் கணிசமாக அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையும் 120 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 58 நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 நோயாளர்களும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 நோயாளர்களும், வாகரை, மட்டக்களப்பு, வவுனதீவு, ஆகிய பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 120 பேர் டெங்கு நோய்ப்பாதிப்புக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஏறாவூர், பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த 11 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்து 713 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குப்பட்டுள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,இம்மழைக்காலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலைத் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.