புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

புரவி புயலை அடுத்து யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் கடுமையாக வீசும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 314 குடும்பங்களை சேர்ந்த 1138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளதாகவும், 140 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை 3 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்