டி20 உலக கோப்பை நடந்தால் ரசிகர்களுக்கு அனுமதி: ஆஸ்திரேலியா

டி20 உலக கோப்பை நடந்தால் ரசிகர்களுக்கு அனுமதி: ஆஸ்திரேலியா

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி  வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது  சந்தேகமே. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அடுத்த மாதம் முடிவு செய்கிறது.

இதற்கிடையே உலககோப்பை போட்டியை நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. இதேபோல இந்த ஆண்டு உலகக்கோப்பை நடைபெற வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அமைப்பில் இருப்பவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான ஈசான் மானி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உலக கோப்பை நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

உலக கோப்பையில் விளையாட 15 நாட்டு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் ரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை இல்லை.

கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.