கேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 27 பேர் பலி

கேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 27 பேர் பலி

கேரளாவில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 378 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 378 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 83 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 64 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 970 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 148 ஆக அதிகரித்துள்ளது.