வேலைக்குச் சென்ற யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

வேலைக்குச் சென்ற யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் - மல்லாவி வீதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா விஜியானந்தன்(37) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தச்சு வேலைக்காக முல்லைத்தீவு மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் வருகை தந்து வேலை புரிந்து வந்த நிலையில்,

நேற்றையதினம்(03) இரவு பத்து மணி அளவில் தனது வேலையை நிறைவு செய்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

இதன்போது திடீரென வீதியை குறுக்கறுத்த யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார்.

பின் குறித்த யானையானது மோட்டார் சைக்கிள் மீதும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் மீதும் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் நேற்றிரவு மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த இடத்திற்குச் சென்ற மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.