கொரோனா பரவலின் எதிரொலி! இன்று முதல் மறு அறிவித்தல் வரை தடை - யாழ். மக்களுக்கு விசேட அறிவித்தல்

கொரோனா பரவலின் எதிரொலி! இன்று முதல் மறு அறிவித்தல் வரை தடை - யாழ். மக்களுக்கு விசேட அறிவித்தல்

தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்துங்கள் என்று மாநகர முதல்வர் ஆனல்ட் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் வெளியிடடுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்றுநீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.

இதற்கு மேலதிகமாக யாழ் மாவட்ட கொவிட் 19 தடுப்பு உயர் மட்ட செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாக யாழ் மாநகர எல்லைக்குற்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் (02) (மறு அறிவித்தல் வரை) தடைசெய்யப்படுகின்றது.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகிக்க வேண்டாமென உணவக உரிமையாளர்கள் மற்றும் நடாத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.

கொவிட் 19 வைரஸ் தாக்கம் பரவலில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை அலட்சியம் செய்து உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகம் செய்யும் உணவகங்கள் யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினரினால் அடையாளப்படுத்தப்படுமிடத்து உரிய கடை நடாத்துனர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், உணவகங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

இது குறித்து மிகுந்த அவதானமாக செயற்படுமாறு பொது மக்களும், உணவக நடாத்துனர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதன் ஊடாக மக்கள் அதிகளவில் கடைகளில் தரித்திருப்பதனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். பொது மக்களின் பாதுகாப்பு கருதி எம்மால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்மாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.