தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தொடர்பில் யாழ் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தொடர்பில் யாழ் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரெலியா பாதைகளிலில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் என்பவற்றை அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை வரைவது தேர்தல் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடு இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினை கருத்தில் கொண்டு செயற்படுமாறு தேர்தல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பதாகைகள் பொது இடங்களில் காணப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் கம்பரெலியா திட்டத்தின் போது நடப்பட்டுள்ள பதாகைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்களை ஸ்டிக்கர் ஊடாக மறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களிலில் அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்கள், கட்சியின் சின்னம் ஆகியன வரையப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த செயற்பாடானது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரனான செயற்பாடாகும். எனவே அவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மீது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.