ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மதுரை-மும்பை இடையே மீண்டும் விமான சேவை

ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் மதுரையில் இருந்து மும்பைக்கு மீண்டும் விமானம் இயக்கப்பட இருக்கிறது.

மதுரையில் உள்ள ஏர் இந்தியா நிறுவன அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இந்த விமான சேவை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து, வழக்கமான விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் மும்பை- சென்னை- மதுரை- சென்னை-மும்பை விமான சேவையும் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.

அதன்படி, அந்த விமானம் காலை 9.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது. அதன்பின்னர் அங்கிருந்து 12.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது.

அதன்பின்னர் அதே விமானம் மதுரையில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்னை செல்கிறது. அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 6.15 மணிக்கு மும்பையை சென்றடைகிறது. இந்த விமானம் தினமும் இதே நேரத்தில் இயக்கப்படுகிறது.

பயணிகளின் வருகையை பொறுத்து விமான சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம். இதற்கான டிக்கெட்டுகளுக்குwww.airindia.in என்ற இணையதளத்திலும், மதுரை விமான நிலையத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.