பகிரங்க மிரட்டல் விடுத்த வடகொரியா- தென் கொரியாவிலிருந்து வெளியான பதிலடி

பகிரங்க மிரட்டல் விடுத்த வடகொரியா- தென் கொரியாவிலிருந்து வெளியான பதிலடி

தாக்குதல் நடத்தி தகர்த்தப்படும் என்று மிரட்டிய வடகொரிய அதிபருக்கு பேச்சுக்கள் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு தாங்கள் தயார் என பதிலடி கொடுத்திருக்கிறது தென்கொரியா.

எல்லையில் பதற்றமான சூழல் ஏற்படுத்துவதை தவிர்த்து, மீண்டும் அமைதி பேச்சு நடத்துவதற்கு வட கொரிய அரசு முன்வர வேண்டும்' என, தென் கொரியா அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்காசிய நாடுகளான தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே, எல்லை உட்பட பல்வேறு விஷயங்களில் நீண்ட காலமாகவே மோதல் நீடித்து வருகிறது.

அண்மையில் வட கொரிய எல்லைக்குள், தென் கொரிய இராணுவ வீரர்கள் பலுான்களை பறக்க விட்டு, விஷம பிரசாரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 'இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால், இரண்டு விளைவுகளை சந்திக்க நேரிடும்; எல்லையில் உள்ள, இரு நாடுகளின் தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்ப்போம்' என, வட கொரியா, நேற்று முன்தினம் மிரட்டியது.

இந்நிலையில், தென் கொரிய அதிபர் மூன் ஜெ இன், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பின், அவர் கூறியதாவது,

வட கொரியாவுடன் அமைதியான நல்லுறவை பின்பற்றவே விரும்புகிறோம். தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்ப்பது போன்ற நடவடிக்கைகள், எல்லை பிரச்சினையை மேலும் மோசமாக்கி விடும். எல்லா பிரச்சினைகளுக்கும், பேச்சு மூலம், சுமுக தீர்வு காண தயாராக உள்ளோம்.

கொரிய அரசு, தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குவதை தவிர்த்து, மீண்டும் பேச்சு நடத்த முன் வர வேண்டும். வட கொரிய அதிபருடன் ஏற்கனவே நடத்திய பேச்சின் அடிப்படையில், இரு தரப்பு பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காண தயார். இதற்கு, வட கொரிய அரசு சம்மதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடகொரியாவின் மிரட்டலான இச்செயல்பாடுகளுக்கு அமைதியே ஒரே வழி என்பதை தென்கொரியா தனது பதிலடி கருத்துக்கள் மூலமாக நிரூபித்திருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தாலும், தென்கொரிய வடகொரியாவிற்கு அஞ்சுவதாக மேற்கத்தேய ஊடகங்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.