சீனாவில் சாலை விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பலி

சீனாவில் நிகழ்ந்த சங்கிலி தொடர் சாலை விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிலின் மாகாணம் புயூ நகரிலுள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை சரக்கு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது.

இதையடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்றின் மீது லாரி பயங்கரமாக மோதியது. அதன் பின்னரும் நிற்காமல் ஓடிய லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது எதிர் திசையில் வந்த ஒரு மினி வேனுடன் லாரி நேருக்கு நேர் மோதியது.

இந்த சங்கிலி தொடர் விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.