நேற்று திங்கட் கிழமை வடக்கு இந்தோனேசியாவின் சுலவேசி தீவிலுள்ள பாலு நகரத்தை 6.6 ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம் தாக்கியதில் இதுவரை 6 பேர்
பலியானதுடன் 43 பேர் காயமடைந்தும் இதில் 8 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் பூகம்பம் தாக்கிய கிராமங்களின் மலைப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு அதிலும் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அனர்த்த நிவாரணப் படை உணவுப் பொதிகளையும் நீர்ப் போத்தல்களையும் போட்டு வருகின்றனர். இந்தோனேசியாவின் அனர்த்த நிவாரணப் பிரிவின் பேச்சாளர் இப்பூகம்பம் தொடர்பாகக் கருத்துரைக்கையில் சுமார் 471 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பாதைகள் மண்சரிவு காரணமாகத் தடைப் பட்டிருப்பதாகவும் இதனால் மீட்புப் பணி சிரமமடைந்துள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் சேதமடையாத அரச அலுவலகக் கட்டடங்களில் அல்லது பாதுகாப்பற்ற கூடாரங்களில் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை அனர்த்தப் பகுதிகளில் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட சில தன்னார்வ சமுக அமைப்புக்களும் இணைந்து பொது மக்களை வெளியேற்ற டிரக் வண்டிகளையும் சிகிச்சையளிக்க அம்புலன்ஸ் வண்டிகளையும் அளித்துள்ளன.
இந்தோனேசியா ஆசிய பசுபிக் வலயத்தின் ‘ரிங் ஆஃப் ஃபைர்’ என அழைக்கப் படுகின்றது. அதாவது அங்குள்ள எரிமலைகளாலும் பூகோளவியல் அமைப்புக் காரணமாகவும் அடிக்கடி பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு போன்ற அனர்த்தங்களை அந்நாடு எதிர் நோக்கி வருகின்றது.
இங்கு சமீபத்தில் அதாவது டிசம்பர் 26, 2004 இல் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட சுனாமி இன் தாக்கத்தால் மட்டும் 230 000 பொது மக்கள் கொல்லப் பட்டனர். இதில் 50% வீதத்திற்கு மேல், இந்தோனேசியாவின் மேற்கே உள்ள அகெஹ் மாகாணத்தில் பலியானவர்கள் ஆகும்.










