இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அதிரடி வீரர் ஷேவாக் 250 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்ற மைல்கல்லை கடக்க உள்ளார். அதேபோல சுரேஷ் ரெய்னா மற்றும் ஜாகிர்கான் ஆகியோரும் மைல்கல்களை கடக்க உள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த 5 போட்டிகளிலும் இந்திய அதிரடி துவக்க வீரர் ஷேவாக் கலந்து கொள்ளும் பட்சத்தில், சர்வதேச அளவில் 250 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்ற மைல்கல்லை அவர் கடப்பார்.
இதுவரை 245 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஷேவாக், 104.68 ஸ்ட்ரைக் ரேட் உடன் 8,090 ரன்களை சேர்த்துள்ளார். சராசரியாக 35.17 ரன்கள் வைத்துள்ளார்.
கடந்த மார்ச்சில் வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஷேவாக் காயம் காரணமாக ஓய்வெடுத்து கொண்டார். அதன்பிறகு ஐபிஎல் 5 தொடரில் சிறப்பாக ஆடிய ஷேவாக், இலங்கைக்கு எதிரான போட்டிகளிலும், சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேவாக் 250 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற மைல்கல்லை கடப்பதன் மூலம், இந்திய வீரர்களில் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பட்டியலில் 7வது இடத்தை பிடிப்பார். இந்த பட்டியலின் முதலிடத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (463 போட்டிகள்) உள்ளார்.
இப்பட்டியலின் 2வது இடத்தில் ராகுல் டிராவிட்(340 போட்டிகள்), அதன்பிறகு அசாருதீன்(334), சவுரவ் கங்குலி(308 போட்டிகள்), யுவராஜ் சிங்(271 போட்டிகள்), அனில் கும்ப்ளே(269 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர். சர்வதேச அளவில் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பட்டியலிலும், சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல இலங்கை ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற மைல்கல்லை கடப்பார். மேலும் இடதுகை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா 4 போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 150 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற மைல்கல்லை கடப்பார்.










