சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, இநதிய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திரசிங் தோனி, பாகிஸ்தானுடன் போட்டித் தொடரில் விளையாட இந்தியா தயாராக இருக்கிறது என்றார்.
கிரிக்கெட் ஒருநாள் போட்டித் தொடர், மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட இலங்கை செல்லவிருக்கும் இநதிய அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரண்டாவது நாளாக பயிற்சியில் ஈடுபாட்டிருந்தது. இன்றைய பயிற்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இநதிய கிரிக்கெட் அணிக் கேப்டன் தோனி,
“பாகிஸ்தானுடன் தொடர் போட்டிகளில் விளையாட இந்தியா தயாராக இருக்கிறது. பாகிஸ்தானுடனான இந்தியாவின் போட்டி, அதிகம் சவால் நிறைந்ததாகவே இருக்கும். எனவே பாகிஸ்தானுடன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம். விளையாட்டில் உணர்ச்சிவசப் படுவது தவறு. இரு நாடுகளுக்கு இடையிலுமான செண்டிமெண்டுக்களை விட்டுவிட்டு விளையாட்டில் மட்டும் ஆர்வம் செலுத்தவுள்ளோம்’ என்றார்.
இலங்கை தொடர் பற்றி கருத்து தெரிவிக்கையில் ‘இந்திய இலங்கை போட்டிகளின் போது விளையாட ஒரு புது வியுகம் அமைத்து இருக்கிறோம். அதன்படி விளையாட திட்டமிட்டுள்ளோம். அதை இப்போது சொல்ல முடியாது.
பவுலிங், பேட்டிங் என்று அணியின் வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் இடையில் போதிய இடைவெளி இருந்தால்தான் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும். அடுத்தடுத்த தொடரில் இலங்கையுடன் இந்தியா தனது திறமையை நிரூபிக்கும்” என்று பேசினார் தோனி.










