பருவமழை தாமதமாவதால் இலங்கையில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதால், விவசாயம், நீர் மின்உற்பத்தி என்பன கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மகிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில், அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் திறைசேரி செயலர் ஆகியோரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
சிறிய குளங்கள், நீர்த்தேக்கங்கள் முற்றாக வற்றி வறண்டு போயுள்ளன.
பாரிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொலன்னறுவில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன.
இதற்கிடையே, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யாது போனால் நீர் மின்உற்பத்தி முற்றாக தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க அனல் மின் உற்பத்தி மூலமே மின்சாரத் தேவை ஈடுசெய்யப்படுகிறது.
இதனால் விரைவில் கடுமையான மின்வெட்டு, நீர்வெட்டு என்பன நடைமுறைக்கு வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












