மகாராஷ்டிராவில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்ற அதிபயங்கர பஸ் விபத்தில், 14 சாப்ட்ஃவேர்
பொறியியலாளர்கள் உட்பட 30 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து ஷேர்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் ஆஸ்மானா பாத் மாவட்டத்தில் வைத்து பாலமொன்றிலிருந்து தவறி 50 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததால் இவ்விபத்து ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற போது பஸ்ஸில் 46 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் 27 பெர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அதில் 22-24 வயதுக்கு உட்பட்ட 15 சாப்ட்வேர் பொறியியலாளர்கள் அடங்குவர். அவர்களில் 9 பேர் பெண்களாவார்கள். டாடா ஆலோசனை சேவை மையத்தில் (TCS) இவர்கள் அனைவரும் பயிற்சி பெற்றவர்கள். கடந்த வாரம் தமது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வேலையில் இணைந்து கொள்ள தயாராகியிருந்தனர். அதற்கு முன்னதாக சீரடி சாய்பாபா ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 16 பேர் ஹைதராபாத்தின் ஒஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பஸ்ஸின் இரு ஓட்டுனர்களும் உயிர் பிழைத்துள்ளனர். ஜெய்வர்தன் ரெட்டி எனும் ஒருவயது நிரம்பிய பாலகன் உயிர் பிழைத்துள்ளான். எனினும் அவரது பெற்றோர், தாத்தா பாட்டி ஆகியோர் விபத்தில் பலியாகியுள்ளனர்.
மூன்று பேரின் சடலங்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
ஓட்டுனர் மதுப்பொதையிலிருந்ததாக சிலர் சாட்சியமளித்துள்ளனர். காவற்துறையினர் குறித்த இரு ஓட்டுனர்களதும் இரத்தமாதிரியை எடுத்து பரிசோதனையை தொடக்கியுள்ளனர்.
பஸ் விபத்து நடைபெற்று ஒரு மணிநேரத்திற்கு மேலாக தமக்கு உதவிக்கு எவரும் வரவில்லை என விபத்தில் தப்பிய பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார். பஸ்ஸிலிருந்து சிரமப்பட்டு வெளியே வந்த நான், வீதிக்கு சென்று உதவிக்குரல் கேட்டு அலறினேன். ஆனால் எந்த வாகனும் நிற்கவில்லை. ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஒரு பஸ் நின்றது. அதில் இருந்தவர்களுடைய உதவியுடன் அருகில் உள்ள காவற்துறை நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தோம். அதற்குள் காலை 5 மணியாகிவிட்டது என அப்பெண் கவலைப்பட்டுள்ளார்










