இந்திய மீனவர்களின் அட்டகாசங்களும் அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டிய காரைநகர் கடற்றொழிலாளர்கள், இவற்றைத் தடுத்த நிறுத்த இலங்கை அரசாங்கமோ கடற்படையினரோ முன்வரவில்லையென்றும் கண்ணீர் மல்கினார்கள்.
காரைநகரில் உள்ள அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தில் நேற்று இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர்கள் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் எமது கடற்பரப்பில் காணப்பட்ட இந்திய றோலர்கள் இப்போது வாரத்தில் எஞ்சியிருந்த நான்கு நாட்களும் வந்து போகின்றன. இதனால் நாம் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலைக்குள் தள்ளப்படுகின்றோம்.
எமது பகுதிகுள்ளாக வருகின்ற அவர்களது படகுகள் எமது வலைகளை அறுத்து நாசம் செய்கின்றன. இதனால் கடன்பட்டு தொழில் செய்யும் நாம் எமது உபகரணங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து நடுத்தெருவிற்கு வருகின்றோம்.
முன்னர் றோலர் படகுகளில் மட்டும் வந்து போனவர்கள் இப்போது நாட்டுப் படகுகளையும் எமது பகுதிக்குள்ளாக கொண்டு வருகின்றனர்.
இவை தொடர்பில் பல முறை நாம் முறையிட்டும் கடற்படையோ, இலங்கை அரசாங்கமோ நடவடிக்கை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எமது இலங்கை கடற்பரப்பிற்குள்ளாக இந்திய மீனவர்களது படகுகள் வருவதை அவர்கள் வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்கின்றனர்.
இவ்வாறு பல முறை பாதிக்கப்பட்ட நாம் இப்போது பட்டினி சாவை எதிர்கொள்ளும் நிலைக்குள்ளேயே தள்ளப்படுகின்றோம். எனவே இந்திய மீனவர்களது இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும்.
நாம் எவ்வாறு அவர்களது கடற்பகுதிக்குள்ளாக போக முடியாதே அவ்வாறே அவர்களும் எங்கள் இலங்கை கடற்பகுதிக்குள்ளாக வர முடியாது. இதற்கு தீர்வு எட்டப்படாது போனால் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதைத் தவிர எமக்கு வெறு வழியில்லை என்றனர்.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், இவ்விடயம் சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடன் பேசுவதாகவும் தெரிவித்ததோடு இந்திய தூதுவருடன் இவை தொடர்பில் உடனடி நடவடிக்கைக்கு கோரிக்கை விடுவதாகவும் தெரிவித்தார்.










